நாக்பூர் பிட்ச் பற்றி கடும் விமர்சனங்கள் ஏற்கெனவே எழுந்துள்ள நிலையில் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா, ‘கவனம் ஆட்டத்தில் இருக்க வேண்டுமே தவிர ஆடுகளத்தில் அல்ல’ என்று அறிவுக்குப் பொருந்தாத ஒரு அறிவுரை வழங்கியுள்ளார். பிட்ச் எப்படி என்று தெரிந்தால்தான், கணித்தால்தான் வீரர்களைத் தேர்வு செய்ய முடியும். உத்திகள் வகுக்க முடியும். இதெல்லாம் ரோஹித் சர்மாவுக்குத் தெரியாதா என்ன? இப்படி ஒன்றை பொத்தாம் பொதுவாகச் சொல்லி வைத்தால் சமூக ஊடகங்களில் இந்திய கிரிக்கெட்டை மட்டுமே வெறித்தனமாக ரசிக்கும் ரசிகர்கள் ‘வெல் செட்’, சூப்பர் என்றெல்லாம் லைக்குகளும் வரவேற்புகளும் எகிறும்.

ஆனால் உண்மை என்னவெனில் எல்லோரும் ஆட்டத்தில்தான் கவனம் செலுத்துவார்கள், ஆனால் அதற்குப் பிட்ச் பற்றிய அறிவும் வேண்டும். நம்மூர் கே.எல்.ராகுல் வங்கதேசத்தில் கூறினாரே ‘பிட்ச் பற்றி எனக்குத் தெரியாது, அதைக் கணிக்க உள்ளே பண்டிதர்கள் உள்ளனர்’ என்றாரே!! இதை எப்படிப் புரிந்து கொள்வது? ஒரு கேப்டன், களத்தில் இயங்கும் கேப்டன், களவியூகம் அமைக்கும் கேப்டன், அணித்தேர்வு செய்யும் கேப்டன், பந்து வீச்சு மாற்றம் செய்யும் கேப்டன் பிட்ச் பற்றி எனக்குத் தெரியாது என்று கூறும் போக்கைத்தான் ரோஹித் சர்மா ஆஸ்திரேலியர்களுக்கும் அறிவுறுத்துகிறாரா? அப்படியென்றால் இதைவிட அபத்தம் வேறு எதுவும் இருக்க முடியாது. அப்படியே பாட் கமின்ஸும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது ‘சாரி ரொம்ப ஓவர்’ இல்லையா?



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்